ஞாயிறு, 3 ஜனவரி, 2010

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

பாடல்: சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
படம்: சந்திரோதயம்
பாடலாசிரியர்: வாலி
இசை: எம் எஸ் வி


மிகவும் சாதாரணமான, சுவாரஸ்யமற்ற கதையைக் கொண்ட இப்படத்துக்கு முத்து முத்தான பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை அனைத்துக்கும் சத்தான இசையை ஊட்டி, உலவ விட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது ஒரு வழக்கமான காதல் டூயட்தான் என்றாலும், இதை ஒரு சிற்பம்போல் மிக அழகாகச் செதுக்கியிருக்கிறார் வாலி.

இந்தப் பாடலில் நாயகன் பாடும் வரிகள் வழக்கமானவைதான். ஆனால் நாயகியின் வரிகளில்தான் வைரங்களைப் புதைதிருக்கிறார் இந்த வித்தகக் கவிஞர். ஒரே பாடலில் எத்தனை உவமைகள்1 இத்தனை உவமைகள் நிறைந்த பாடல் வேறொன்று இருக்குமா ('அத்திக்காய்' நீங்கலாக) என்பது சந்தேகம்தான்!

இசை பற்றிப் பேசும் அறிவு எனக்கு இல்லை என்பதால், இசையின் சிறப்புகளைப்பற்றி அதிகம் குறிப்பிடப் போவதில்லை. ஆயினும் என் பாமர அறிவுக்குப் புலப்பட்ட ஓரிரு கருத்துக்களை மட்டும் குறிப்பிட விழைகிறேன். இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்க்கிறார் எம் எஸ் வி என்று தோன்றுகிறது - பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக்கருவிகள் தடங்கலாக இருக்கக்கூடாது என்பதாலோ என்னவோ!

மிக எளிமையான் துவக்க இசை. கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது.) ஒரு பிரம்மாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல, மென்மையாக ஆர்ப்பட்டமில்லாமல் இசைத்துவிட்டுப் போகிறது துவக்க இசை.

கேட்டவுடனேயே மயங்க வைக்கும் இனிமையான் பல்லவியை டி எம் எஸ் துவங்கி வைக்கிறார். பல்லவியிலேயே மூன்று உவமைகளைத் தாராளமாக, அநாயாசமாக, 'இந்தா எடுத்துக்கொள்' என்பதுபோல், எடுத்து வீசியிருக்கிறார் கவிஞர் வாலி.

சந்த்ரோதயம் ஓரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ

(சந்த்ரோதயம்)

அடுத்து நாயகி தன்னைப் பற்றிப் பேசுகிறாள். நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?

குளிர்காற்று கிள்ளாத மலர்
கிளி வந்து கொத்தாத கனி
நிழல்மேகம் தழுவாத நிலவு

வியப்பாக இருக்கிறதா? ஆயினும் என்ன? இப்படிப்பட்டவளை நீ உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டாயே!

இந்த வரிகளில் நாயகியின் பெருமை தெரிகிறது. 'எப்படிப்பட்ட தூய்மையான பொருளை நீ அடைந்திருக்கிறாய் என்பதை நீ உணர வேண்டும்' என்று நாயகனுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன இவ்வரிகள்.

'இப்படி என்னைத் தூய்மையாக வைத்துக் கொண்டதெல்லாம் நீ உன் நெஞ்சுடன் என்னை இணைத்துக் கொள்ளத்தானா?' என்ற (போலியான) ஆதங்கமும் இவ்வரிகளில் ஒலிக்கிறது.

இவ்வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள முடியும்.
குளிர் காற்று கிள்ளாத (என்ன அருமையான சொல்! குளிர் காற்று உடலில் படும்போது ஏற்படும் சிலிர்ப்பை 'கிள்ளல்' என்று வர்ணித்திருக்கிறார் கவிஞர். ஆங்கிலத்தில் 'tickling sensation' என்று சொல்லலாமோ?) மலர், கிளி வந்து கொத்தாத கனி, நிழல் மேகம் தழுவாத நிலவு இவை எல்லாம் இயற்கையில் இருக்க முடியாதே? அப்படியானால் நான் மட்டும் எப்படி? நீ என்னை உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டதால் வேறு எந்த விதத் தீண்டல்களும் எனக்கு ஏற்படவில்லை!



குளிர்காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ

இதைத் தொடர்ந்து, நாயகி நாயகனை வர்ணிக்கும் பல்லவி

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

பாடல் இன்னும் பாதி கூட முடியவில்லை. அதற்குள் பன்னிரண்டு உவமைகளை அள்ளித் தெளித்து விட்டார் இரண்டாம் கம்பன்! உவமைக் கவிஞர் என்ற பட்டம் இவருக்கும் பொருந்தும் - இந்த ஒரு பாடலுக்காகவே! இளம் சூரியன் உந்தன் வடிவம், செவ்வானம் உந்தன் நிறம் என்பதெல்லாம் வழக்கமான (ஆயினும் சிறப்பான) வர்ணனைகள். (எம்ஜியாரின் தோற்றத்துக்கும் அவருடைய அன்றைய அரசியல் சார்புக்கும் கூடப் பொருந்துபவைதான்.)

ஆனால் 'பொன்மாளிகை உந்தன் மனமானதோ' என்ற வரியில் ஒரு பொடியை (பொறியை) வைத்திருக்கிறார் கவிஞர், 'என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ' என்ற அடுத்த வரியின் மூலம். 'நீ பொன்மனச் செம்மல்தான். ஆனால் அது எதனால்? என் காதல் உன் மனதில் உயிர் வாழ்கிறதே அதனால்தான். என் காதல்தான் பொன். அது உன் மனதில் இருப்பதால்தான் அது பொன் மாளிகை!'

மீண்டும் பல்லவியின் இரு வரிகளைப் பாடுகிறார் நாயகி.
(இளம் சூரியன்)

இந்த இடத்தில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது ஒரு நீளமான பாடல். இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்!
ஆஹாஹாஹா.......

என்ன ஒரு ஹம்மிங் (இதற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)
இந்த ஹம்மிங்கைக் கேட்கும்போது எனக்கு வேறு இரண்டு ஹம்மிங்குகள் நினைவுக்கு வருகின்றன. மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, எனக்குத்தோன்றிய உணர்வு இது. இசை வல்லுநர்கள் எப்படிப் பார்ப்பார்களோ தெரியாது!

இந்தப் பாடலின் ஹம்மிங், காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கிறாள்.

'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலில் வரும் ஹம்மிங், ஒரு இன்பக் கடலில் மூழ்கி மூழ்கி எழும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த நாயகியின் காதல் உறுதியாகி விட்ட ஒன்று.

'யாருக்கு மாப்பிள்ளை யாரோ'வில் வரும் ஹம்மிங் நாயகியின் உல்லாசமான, குறும்புத்தனமான, சீண்டிப் பார்க்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், 'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய...' என்ற சரம ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்!

மீன்டும் நாயகன் பாடும் சரணம்.

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிகொண்ட சிலையல்லவோ

(சந்த்ரோதயம்)

இப்போது கவிஞர் விஸ்வரூபம் எடுக்கிறார்- இவ்வளவு நேரம் சொன்னதெல்லம் மிகவும் சாதாரணம் என்பதுபோல.
நாயகி திருமணத்தை வெறுத்தவள். அவள் காதல் வயப்படும்போது, அந்த மாற்றம் படிப்படியாகத்தான் நிகழ வேண்டும். முதலில் தன்னைப் பற்றிக் கூறி விட்டுத் தான் நாயகனுக்கு ஏற்றவள்தான் என்ற கருத்தை முன் வைக்கிறாள். இப்போது நாயகன் அவளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்று தெரிந்ததும், அவனோடு தான் இணைய விரும்புவதைத் தெரிவிக்கிறாள். முதலில் உவைமைகளில் துவங்குகிறாள்.

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே

உவைமைகளை அடுக்கிக் கொண்டே போவதில் கவிஞருக்கு எந்த ஒரு சிரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எவ்வளவு நேரம்தான் மறைமுகமாகப் பேசிக் கொண்டிருப்பது? இதற்கு மேல் தயங்கக் கூடாது என்று முடிவு செய்து, அடுத்த வரியில் தன் விருப்பத்தை நேரடியாகவே சொல்லி விடுகிறாள்.

துணையோடு சேராத இனம் இல்லையே!

இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பொருள்களைப்பற்றி. உயிர் இனங்களும் அப்படித்தான் என்று வலியுறுத்துவது போல், 'துணையோடு சேருவது எல்ல உயிரினங்களுக்கும் இயல்பான ஒன்றுதான். எனவே என் மனதைப் புரிந்து கொள்' என்ற செய்தியைச் சொல்லி முடிக்கிறாள்.

இப்போதுதான் நாயகிக்குத்த் தான் செய்த தவறு உரைக்கிறது. 'நான் சொன்ன உவமைகள் எல்லாம் சரிதானா? ஏதோ ஒன்று உதைக்கிற மாதிரி இருக்கிறதே! ஆமாம். நான் முதலில் சொன்ன மூன்று உவமைகளுக்கும், கடைசியாகச் சொன்ன உவமைக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கிறதே!'

அலையும் கடலும் ஒன்றுதான்.
உடலோடு பிறந்ததுதான் நிழல்.
இமையும் விழியும் எப்ப்பொதுமே இணைந்துதான் இருந்து வந்திருக்கின்றன.

ஆனல், உயிர் இனங்களில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனித்தனியே பிறந்து வளர்ந்து, பின்னே இணைகிறார்கள். இது எப்படி மற்ற உவமைகளுடன் பொருந்தும்?

இந்தமுரண்பாட்டைச் சரிக்கட்டுவதற்காக, நாயகி புத்திசாலித்தனமாக, அவசரமாக, அடுத்த வரியை அமைக்கிறாள்.
'என் மேனி உனதன்றி எனதில்லையே'

அதாவது, எப்படி அலை கடலுக்குச் சொந்தமோ, நிழல் எப்படி உடலுக்குச் சொந்தமோ, இமை எப்படிக் கண்களுக்குச் சொந்தமோ, அது போல் நான் உனக்குச் சொந்தம். எனவே கடைசியாக நான் சொன்னது ஒரு சம்பிரதாயமான உவமைதான். முதலில் சொன்ன மூன்று உவமைகள்தான் எனக்கும் உனக்கும் பொருந்தும்.

இந்த 'விளக்கத்தை' அவள் அவசரமாக வெளிப்படுத்துவது இசையிலும் பிரதிபலிக்கிறது. 'துணையோடு சேராத இனம் இல்லையே' என்ற வரியைத் தொடர்ந்து, ஒரு சிறு கால இடைவெளி கூட இல்லாமல், 'என் மேனி உனதன்றி எனதில்லையே' என்று வருவது சிறப்பு. எனினும், முதல் சரணத்திலும் இவ்வாறே வருவதால், இது தற்செயலாக அமைந்தது என்றுதான் கருத வேண்டும். ஒரு தெய்வீக இசை அமைப்பில், இது போன்ற 'தற்செயலான ஆச்சரியங்கள்' அமைவதில் வியப்பில்லை.

நாயகியின் இந்த வரிகளைக் கேட்டதும், நாயகனுக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. காதலியுடன் இணைவதை நினைத்து, நாயகன் பாடத் துவங்கி விடுகிறான்.

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடிமீது தலை வைத்து இளைப்பாரவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ


கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இவை பழைய (கிராமபோன்) இசைத்தட்டுக்களில் இடம் பெற்ற வரிகள். சென்சாரின் வலியுறுத்தலாலோ என்னவோ, திரையில், இந்தச் சரணம் முழுவதுமாக மாற்றப்பட்டது. வாலியின் கற்பனை, உச்சியில் பறந்த வேளையில் நமக்குக் கிடைத்தது ஒரு கூடுதலான சரணம்.

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

(சந்ரோதயம்)

பாடல் ஒரு சிறிய ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான் துவக்கம், முழுமையான ஆனந்ததில் முடிவதை ஹம்மிங்க மாறுபாடு உணர்த்துகிறது.

நாயகியின் சுய அறிமுகம், தன் விருப்பத்தை மெலிதாக வெளிப்படுத்துதல், நாயகனுடன் இணைதல் என்று மூன்று நிலைகளில் சரணங்களை அமைத்திருப்பது வாலியின் சிறப்பு.

பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான் பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும் மெல்லிசை மன்னர், இந்தப் பாடலில், நாயகன் நாயகி இருவருக்கும் ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்டபோதிலும்), இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணஙளை அமைத்திருப்பது புதுமை!

இந்தப் பாடலைக் கேட்கும்போது, இது காற்றினிலே வருக் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!

மெல்லிசை மன்னரின் மாணிக்கக் கற்கள் பதித்த வாலியின் வைர வரிகள் இதோ:

http://www.jointscene.com/php/play.php?songid_list=௧௩௨௯௬

நல்லிசை ரசிகன்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்

படம்: மணப்பந்தல் (1962)
கண்ணாதாசன் விஸ்வ‌நாதன் ‍ ராமமூர்த்தி

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)


மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

சிறு வயதிலேயே என்னை மிகவும் ஈர்த்த பாடல் இது. ஒரு குழந்தை அனைவைரையும் தன்னிடம் ஈர்ப்பது போல், இப்பாடலும் கேட்பவ‌ர் எல்லோரையும் உடனே ஈர்க்கும் வல்லமை (இனிமை) படைத்தது. இந்தப் பாட்டின் அழகே இதன் எளிமை தான். எளிமையான் பாடல் வரிகள், எளிமையான இசை. இந்தப் பாடலை யாருமே சுலபமாகப்ப் பாடி விடலாம். இந்த எளிமையே இந்தப் பாடலின் வலிமை என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒரு இளம்பெண் ஒரு பொம்மைக் குழந்தையிடம் (சிறுமியிடம்) தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் பாடல் இது.

இந்தப் பாடலின் வரிகளைக் கேட்கும்போது, எம் எஸ் வி பற்றி, வாலி சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
'என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப் போனாண்டி'
என்று வாலி எழுதியதை,
'போனவன் போனாண்டி'
என்று திருத்தித் தன் இசைக்கு ஏற்றபடி மாற்றியதுடன், பாடல் வரிகளுக்கும் அழகு சேர்த்தவர் மெல்லிசை மன்னர்.

இந்தப்பாட்டில் கூட முதலில் கவிஞர் 'உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்' என்று (மட்டும்) தான் எழுதி இருப்பாரோ? எம் எஸ் விதான் அதை 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்' என்று இரட்டிருத்திருபாரோ?' என்ற ஐயம் என் மனதில் எழுகிறது!

பல்லவியில் 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்' என்று வருவது போல், முதல் சரணத்தில் வார்தைகள் இரு முறை வருவது அழகு. இரண்டாவது சரண‌த்தில் இதைத் தவிர்த்திருப்பது இன்னொரு அழகு. இரண்டாம் சரனத்திலும் வார்த்தைகள் இரு முறை வந்திருந்தால், கேட்பவற்குச் சற்றுச் சலிப்புத் தட்டியிருக்கக்க் கூடும்.

இந்த எளிய பாடலிலும் இலக்கிய நயத்தை உள்ளடக்க மறக்கவில்லை கவிஞர். காதலன் வாசலுக்கு வந்த பிற‌குதான் பூமுடித்துப் பொட்டு வைத்தாளாம் இந்த நங்கை. பொதுவாக, தலைவனுக்காகத் தலைவி, தலை சீவிப் பூ முடித்துப் பொட்டிட்டுக் காத்திருப்பதுதானே மரபு? ஆனால் இந்த நங்கை, தலைவனின் தலையைக் கண்ட பிற‌குதான் பூ முடித்துப் பொட்டு வைக்கிறாள் என்றால், என்ன காரணம்? முன்பே வைத்திருந்தால், பூ சற்றே வாடியிருக்கும், பொட்டு சற்றே கலைந்திருக்கும் என்ற அச்சத்தால் இருக்குமோ? தன் காதலனைப் புதுப் பொலிவு மாறாமல் எதிர் கொள்ள விழைகிறாள் போலும்!

முதல் சரண‌த்தின் இடையே ஒரு அழகான ஹம்மிங் வருகிறது. 'ஓஓஓஒஓஓ.......' என்று.
ஹம்மிங்கில் இவ்வளவு வகைகள் வேறு எந்த இசை அமைப்பாளராவது முயன்று பார்த்திருப்பாரா?

இரண்டாவது சரண‌த்தில், இதே ஹம்மிங் இசைக்கருவியில் இசைக்கப் படுகிறது.
'அவர் மார்பினிலே காலனமெல்லாம் நடனமாடுவேன்' என்ற வரிக்குப் பிறகு, ஒரு ரம்மியமான நடன இசையாக ஒலிக்கிறது
.'டண்டண்டண்டமண் டடடண்டண்.....'

ஒரு சிறு குழந்தை நம் மார்பில் குதிப்பது போன்ற இனிமையை வெலிப்படுத்தும் இசை. (குழந்தைதானே மார்பில் நடன‌மாட முடியும்?) ஒரு வேளை, இந்த நடன இசையை இங்கே போட்ட பிற‌குதான், இதற்கு இணையாக முதல் சரனணத்தில் ஹம்மிஙகை அமைத்திருப்பாரோ?

ஆர்ப்பாட்டம் இல்லாத, ம‌னதை வருடிக் கொடுக்கும் இனிய பாடல்.

கைபேசியின் அழைப்பொலியாக வைத்துக் கொள்ள மிகவும் பொருத்தமான பாடல்!

குறிப்பு: நான் சொன்னது எதுவும் உஙள் யாருக்கும் தெரியாத ரகசியம் இல்லை என்பதை அறிவேன்!

நல்லிசை ரசிகன்

பொற்காலத்தின் சொற்கோலங்கள் - ஒரு பார்வை

இடம்: அண்ணாமலை மன்றம், சென்னை
நாள்: டிசம்பர் 26, ௨009
நிகழ்ச்சி: பொற்காலத்தின் சொற்கோலங்கள் - எம் எஸ் வியின் திரை இசை நிகழ்ச்சி

(பொதுவாக இது போன்ற அருமையான நிகழ்ச்சிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது என் கருத்து.)


இவ்வளவு அருமையான நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்பது வியப்பான விஷயம். அரங்கம் நிறைந்ததில் வியப்பில்லை என்றாலும், பல இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள் அதிகம் வந்திருந்தது வியப்பான விஷயம். (இவர்களில் பெரும்பாலானோர் செவிலியர் பயிற்சிப்பள்ளி மற்றும் தமிழ் இசைச் சங்கத்தின் இசைக் கல்லூரி மாணவர்கள் என்று தொகுப்பாளர் திரு ப.லட்சுமணன் தெரிவித்தார்.)

இது போன்ற ஒரு நிகழ்ச்சி மூன்று மணி நேரம் நடப்பது பெரிய விஷயம் என்றால், முன்று மணி நேரமும் ரசிகர்கள் இருந்து ரசித்தது அதைவிடப் பெரிய விஷயம். இடையில் பலர் எழுந்து சென்றதைக்கண்டு முதலில் சோர்வு ஏற்பட்டது. ஆனால் எழுந்து சென்றவர்கள் எல்லாருமே திரும்ப வந்து இருக்கையில் அமர்ந்து விட்டர்கள். அப்புறம்தான் புரிந்தது - சிலர் எழுந்து சென்றதற்குக் காரணம் இடைவேளயைத் தாமதப் படுத்தியதுதான் என்று!

காலதாமதம் என்பது வழக்கமான ஒரு மரபாகி விட்ட சூழ்நிலையில், நிகழ்ச்சியை இருபது நிமிடம் தாமதமாகத் துவக்கியதற்கும், ஒன்பது மணிக்கு மேல் நீட்டித்ததற்கும் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தமிழ் (இசைச் சங்கத்தின்) பண்புக்குத் தலை வணங்க வேண்டும்.

நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்த திரு ப.லட்சுமணன் பற்றி ஒரு சில வார்த்தைகள். 'இலக்கியச் சிந்தனை' என்ற அமைப்பைத் துவங்கி, கடந்த முப்பது வருடங்களாக நடத்தி வருபவர் என்பதாலோ என்னவோ, ஒவ்வொரு பாடலைப்பற்றியும் இவரது அறிமுகம் சுருக்கமாகவும், நறுக்குத் தெறித்தாற்போலவும், இலக்கிய நயத்துடனும் இருந்தது. எந்த விதக் குறிப்பும் இல்லாமல், இயல்பாக, சரளமாக, பொருத்தமாக இவர் பேசியது பாராட்டுக்குரியது. ஆனால், இவரது பலவீனமான குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல் ஒலித்ததால், அரங்கின் பெரும்பகுதிக்கு இவர் குரல் சென்றடையவில்லை என்பதுதான் குறை. (இவர் மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரத்தின் மூத்த சகோதரர். மெல்லிசை மன்னரிடம் பெருமதிப்பு கொண்ட இவர், சிதம்பரம் அவர்களை அணுகி மெல்லிசை மன்னருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். நியாயமாகப் பார்த்தால் எம் எஸ் விக்கு பாரத ரத்னா போன்ற ஒரு விருது வசங்கப்பட வேண்டும். பாரத ரத்னா விருது தருவதில் சிக்கல்கள் இருந்தாலும், தாதா சாகிப் விருதுக்கு நிகராக, மெல்லிசை மன்னரின் பெயரில் திரை இசைக்கான ஒரு விருதை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம். திருமதி சோனியாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், மிகவும் வலுவான நிலையிலும் சிதம்பரம் இருக்கிறார். இது போன்ற சந்தர்ப்ப்ங்கள் கிட்டுவது அபூர்வம்.)

மெல்லிசை மன்னரின் புகழைப் பரப்புவதில் எம் எஸ் வி டைம்ஸ் செய்து வரும் சேவை பற்றித் தனது துவக்க உரையில் குறிப்பிட்ட திரு ப.லட்சுமணன் திரு வைத்தி, திரு முரளி, திருமதி மாலதி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

'அவர்கள் கொடுத்த பட்டியலின்படி பாடல்களை வழங்குகிறேன்' என்று எம் எஸ் வி துவங்கியதும், லட்சுமணன் குறுக்கிட்டு, 'அப்படியெலாம் 'நான் ஆணையிட்டால்' என்று எம் எஸ் வியிடம் பாட்டு வாங்க முடியாது.' என்று சமாளித்தார்.

முதலில் காதல், பாசம் ப்ற்றிய பாடல்கள், பிறகு தத்துவப் பாடல்கள் என்று இருவகைப் பாடல்கள் பாடப்பட்டன.

பாடல்களின் பட்டியலை முதலில் கொடுத்து விடுகிறேன்.

1) இறை வணக்கம் - தேவாரப் பண்.

2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (கிருஷ்ண கானம் - தனி ஆல்பம்)

3) கொடியசைந்ததும் (பார்த்தால் பசி தீரும்)

4) தேடினேன் வந்தது (ஊட்டி வரை உறவு)

5) உலகமெங்கும் ஒரே மொழி (நாடோடி)

6) மதுரா நகரில் (பார் மகளே பார்)

7) அவளுக்கென்ன (சர்வர் சுந்தரம்)

8) அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை)

9) ராசாத்தி ஒன்னை (வைதேகி காத்திருந்தாள்)

10) வெத்தல போட்ட பத்தினிப் பொண்ணு (வீரத் திருமகன்)

11) திங்கள் உறங்கிய போதும் (பெற்ற மகனை விற்ற அன்னை)

12) உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? (அசோக் குமார்)

13) உறவு என்றொரு சொல் இருந்தால் (இதயத்தில் நீ)

14) பார் மகளே பார் (பார் மகளே பார்)

15) சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

16) உன்னைத்தான் நான் அறிவேன் (வாழ்க்கைப் படகு)

17) மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (அனுபவி ராஜா அனுபவி)

18) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (வாழ்க்கைப் படகு)

19) ஒஹோஹோஹோ மனிதர்களே (படித்தால் மட்டும் போதுமா)

20) வீடு வரை உறவு (பாத காணிக்கை)

21) பண்ணின் நேர்மொழியாள் (திருநாவுக்கரசர் தேவாரம்)

22) ராமன் எத்தனை ராமனடி (லக்ஷ்மி கல்யாணம்)

23) ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் (டெல்லி மாப்பிள்ளை)

24) தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே (குழந்தைக்காக)

25) கோதையின் திருப்பாவை (கிருஷ்ண கானம் - தனி ஆல்பம்)

26) அழகு ரசிப்பதற்கே (வாழ்க்கை வாழ்வதற்கே)

27) கேட்டுக்கோடி உருமி மேளம் (பட்டிக்காடா பட்டணமா)

இதில் நான்கு பாடல்கள் மெல்லிசை மன்னரின் பாடல்கள் அல்ல. 'மற்ற இசை அமைப்பாளர்களும் தனக்கு நிகரானவர்கள்தான் என்று எம் எஸ் வி கருதுவதால், அவர்களது பாடல்களையும் இடம் பெறச் செய்ய விரும்புகிறார்' என்ற ப.லட்சுமணனின் விளக்கத்துடன், 'ராசாத்தி ஒன்னை' பாடல் பாடப் பட்டது. ஆனால் இந்தப் பாடல் முடிந்ததுமே, இதே சந்தத்தில் அமைந்த 'சிங்காரப் புன்னகை' என்ற எம் எஸ் வியின் பாடலின் பல்லவியையும், ஒரு சரணத்தையும் அனந்து பாடிக் காட்டிய்துடன், இரண்டு பாடல்களையும் இரண்டு ராகங்களிலும் பாடிக் காட்டினார். 'ஒன்றிலிருந்து ஒன்று வருவது இயல்பு. சந்தம் தான் ஒன்று. ராகங்கள் வேறு' என்று எம் எஸ் வி விளக்கம் அளித்தாலும், சிலரால் இது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. பெருந்தன்மையுடன் அவர் இந்தப் பாடலை வழங்கியிருந்தாலும், 'இதைச்' சுட்டிக் காட்டத்தான் அவர் இந்தப் பாடலைச் சேர்த்துக் கொண்டார் என்று சிலர் வாதிடலாம். இந்த ஒப்பிடலை மெல்லிசை மன்னர் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

இது போல, சின்னச் சின்ன ஆசை' பாடல் முடிந்ததும், 'இந்தப் பாடலைப் பற்றி எம் எஸ் வி ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்வார்' என்று ப. லட்சுமணன் எடுத்துக் கொடுக்க, 'என்னை வம்பில் மாட்டி விடரீங்களே' என்றபடியே, 'சின்ன சின்ன ஆசை,' வீடு வரை உறவு,' 'பேசுவது கிளியா,' 'மாம்பழத்து வண்டு' எல்லாமே ஒரே சந்தத்தில் அமைந்தவை என்றாலும், வெவ்வேறு பாவங்களில் அமைந்திருப்பதால், வேறு ராகங்களில் அமைந்தவை என்று எம் எஸ் வி சுட்டிக் காட்டினார். 'வான்மீதிலே' யிலிருந்து 'வா வெண்ணிலா'வை அமைத்ததையும், 'ரகுபதி ராகவ ராஜாராமி' லிருந்து, 'நானோரு காதல் சன்யாசி'யை அமைத்ததையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. இந்தத் தகவல்களை அவர் முன்பே மெகா டிவியிலும், வேறு சில மேடைகளிலுலும் சொல்லியிருப்பதால், இவற்றை மீண்டும் சொல்லியிருக்க வேண்டியதில்லை. இதனால், நிகழ்ச்சியின் ஓட்டவேகம் சற்றே குறைந்தது என்பதுதான் உண்மை.

அசோக் குமாரில் இடம் பெற்ற தியாகராஜ பாகவதரின் பாடலும், கே வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்த டெல்லி மாப்பிள்ளை பாடலும் இடம் பெற்றது தமிழ் இசைச் சங்கத்தின் விருப்பப்படி என்று நினைக்கிறேன். 'இதயம் என்ற விலை கொடுத்து அன்பை வாங்க யாரும் இல்லை' என்ற வரிகளுக்காகவே மட்டும் 'ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்' பாடல் இடம் பெற்றிருக்கும் போலும்! என்னைப் பொருத்த வரை, இதனால், நான்கு எம் எஸ் வி பாடல்கள் குறைந்து விட்டன!

'பண்ணின் நேர்மொழியாள்' என்ற தேவார இசைப் பாடலை இடம் பெறச் செய்ததற்காக மட்டும், தமிழ் இசைச் சங்கத்தைப் பாராட்ட வேண்டும். இந்தப் பாடல் (தொகுப்பு) திருவருட்செல்வர் திரைப் படத்தில் கே வி மகாதேவன் இசையில் சம்பிரதாயமான முறையில் பாடப் பட்டிருக்கிறது. ஆனால் மெல்லிசை மன்னர் இதை மெல்லிசையில் அருமையாக வடித்திருந்தார். சற்றே 'நிலவே என்னிடம் நெருங்காதே' சாயலில் அமைந்திருந்த இந்தப் பாடல் செவிக்கு ஒரு அருமையான விருந்து. இந்த இனிமையான தேவாரப் பாடலைக் கேட்டபோது, தமிழ் இசைச் சங்கம் போன்ற அமைப்புகள், மெல்லிசை மன்னரின் திறமையை, தேவாரம், திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம் போன்ற தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு இசை அமைக்கப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பூனைக்கு யார் மணி கட்டுவது?

மெல்லிசை மன்னரின் இசைகுழுவினரான, மெகா தொலைக்காட்சியின் என்றும் எம் எஸ் வி நிகழ்ச்சியில் பங்கு பெரும் அதே பாடகர்களும் (கோவை முரளி, அனந்து, ஜெயஸ்ரீ, கல்பனா), பின்னணி இசைக்குழுவினரும்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள்.. கூடுதலாக, கீபோர்டு வாசித்த ராஜன் 'ஆண்டவன் ஒருநாள் கடைவிரித்தான்' பாடலைப் பாடினார். 'தேவன் வந்தான்' பாடலில், டி எம் எஸ் பாடும் வரிகளை ராஜன் பாட, வழக்கமாக டி எம் எஸ்ஸின் குரலை எதிரொலிக்கும் முரளி, சீர்காழியின் குரலை சுவீகரித்துக் கொண்டார்! இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மூன்று மதத்தினரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாடல் 'தேவன் வந்தானை'த் தவிர வேறு இருக்கிறதா என்ன?

'உன்னைத்தான் நான் அறிவேன்' பாடலைப் பற்றிக் குறிப்பிட்ட லட்சுமணன், 'பெண்மையே பாவம் என்றால், மன்னவனின் தாயாரோ?' என்ற கவிஞரின் அற்புதமான வரிகளை சிலாகித்துப் பேசினார்.

நுணுக்கமான ராக வேறுபாடுகள், சங்கதிகள், விதவிதமான வாத்தியக் கருவிகளின் இசை எல்லாம் நிறைந்த 'மதுரா நகரில்' பாடலை, ஒரு சில இசைக்கருவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு மேடையில் வழங்கியது அற்புதம்.

'வீடு வரை உறவு' பாடல் துவங்கியதும், அரங்கத்தில் சற்று முணுமுணுப்பு எழுந்தது (பாடலின் சூழ்நிலை தோற்றுவித்த சங்கடத்தினாலோ என்னவோ!) ஆயினும், மூன்றாவது, நான்காவது சரணங்களுக்கு முன் இணைப்பிசையாக வரும் உச்ச தொனி வாத்திய இசையை வியந்து பெரும் கரவோசை எழுப்பினார்கள் ரசிகர்கள்.

'ஓஹோஹோஹோ மனிதர்களே', 'வெத்தல போட்ட' போன்ற அதிகம் இசைக்கப்படாத பாடல்கள் நிகழ்ச்சியில் இடம் பெற்றது இன்னொரு சிறப்பு. 'வெத்தல போட்ட பத்தினிப் பொண்ணு' போன்ற அருமையான பாடல்கள் மறக்கப்பட்டு வருவது பற்றிய ஆதங்கம் கொண்டிருந்த எனக்கு, இந்நிகழ்ச்சியில் இந்தப்பாடல் இடம் பெற்றது மகிழ்ச்சியளித்தது. பாடலின் இடையே, 'இது ஒரு குத்துப்பாடல்தான். ஆனால் மெலடியுடன் அமைந்தது. பாடல் வரிகளும் அர்த்தமுள்ளவை. கவனியுங்கள்' என்று எம் எஸ் வி சுட்டிக் காட்டினார். இந்தப் பாடல் முடிந்ததும் சிலர் 'ஒன்ஸ் மோர்' கேட்க, 'இப்போதுதான் கஷ்டப்பட்டுப் பாடினார்கள். மறுபடியும் எப்படிப் பாடுவது?' என்றார் எம் எஸ் வி.

வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ வேண்டும் என்று விளக்கும் கவிஞரின் (வாழ்க்கை வாழ்வதற்கே) பாடலை நிகழ்ச்சியின் இறுதிப்பாடலாக, லட்சுமணன் அறிவித்தார். ஆனால் இறுதிப்பாடலாக எம் எஸ் வி விரும்பியது வேறொரு பாடல். அதனால் ஒரு பாடல் போனஸாகக் கிடைத்தது ரசிககளுக்கு!

'ஒரு சென்டிமென்ட்டுக்காக' என்று எம் எஸ் வி சொன்னாலும், 'கேட்டுக்கோடி உருமி மேளம்' என்ற பாடலை இறுதிப் பாடலாக அவர் அமைத்ததற்கு இன்னொரு காரணம் இருந்தது. பாடலின் முடிவில், தாள வாத்தியங்களை வைத்து, கர்நாடக இசைக் கச்சேரிகளில் வரும் தனி ஆவர்த்தனம் போல், ஒரு அமர்க்களமான தனி ஆவர்த்தனத்தை நடத்தி விட்டார் மெல்லிசை மன்னர்! இது நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான முத்தாய்ப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியில் பெரும்பாலும் மெல்லிசை மன்னர் நின்று கொண்டே இருந்தார். அவ்வப்போது ஸ்டூலில் அமர்ந்தாலும், சில வினாடிகளில் எழுந்து நின்று கைகளை அசைத்து இசைக்குழுவை இயக்கத் தொடங்கி விடுவார். இத்தனைக்கும், இசைக்குழுவை இயக்கத் தனியாக ஒரு நடத்துனர் இருந்தார்! லட்சுமணன் இவர் வயதை எண்பத்திரண்டு என்று குறிப்பிட்டபோது, எம் எஸ் வி உடனே மறுத்து, 'இல்லை இருபத்திரண்டுதான்' என்றார். அவரது சுறுசுறுப்பும், செயல் வீச்சும் அவர் கூறியதை உண்மையாக்கும் விதமாக இருந்தன.

வழக்கம்போல் தன்னைப் பாராட்டிப்பேசுவதை இவர் அனுமதிக்கவில்லை. 'ராசாத்தி ஒன்னை.' பாடலின் சந்தம் பற்றி இவர் விளக்கியபோது, லட்சுமணன், 'எம் எஸ் வி ஒரு கங்கை நதி. கங்கை நதிக்குப் பல கிளைகள் உன்டு. அந்தக் கிளைகளில் பாய்வதும் கங்கை நீர்தான்' என்று சொன்னதும், எம் எஸ் வி உடனே அனந்துவை அழைத்து 'மன்னிக்க வேண்டுகிறேன்' பாடலின் முதல் வரியைப் பாட வைத்தார். பிறகு லட்சுமணனிடம், 'மன்னிக்க வேண்டுகிறேன் நான் ஒன்றும் பெரிதாகச் சாதித்து விடவில்லை. என்னைப் புகழ வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார்.

லட்சுமணன் குறிப்பிட்ட இன்னொரு கருத்து: "நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் அமெரிக்காவில் வசித்தாலும், அவர் பிறந்தது சிதம்பரத்தில்தான். ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான், எம் எஸ் வி என்ற பல்கலக் கழகத்தின் மாணவர்தான்."

'பொற்காலத்தின் சொற்கோலங்கள்' மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் "இசைக்கோலங்களாக" செவிகளுக்கு விருந்தளித்த 2009 டிசம்பர் 26ஆம் நாளின் மாலை நேரம் ஒரு பொற்காலம்தான்.

நல்லிசை ரசிகன்